Thursday, April 29, 2010

கண்ணுக்குள் மின்னல்


கண் விழிக்க அலாரம் வைத்து கண் கசக்கி விழித்து,
கண் முடி தியானிக்க கண நேரம் ஒதுக்கி,
கண் விழிக்கும் கைக்குழந்தை கண்ணில் படாமல் ஒதுங்கி ,
கண் விரித்து நோக்கி காலைப் பேருந்தைத் தேடி,
கண் பிதுங்கும் கூட்டத்துடன் காணாமல் கலந்து போய்,
கண்டு பிடித்துக் கூறும் குற்றம் கண்டுகொள்ளாமல் விட்டு,
கண் சிமிட்டும் நேரம் உணவை கடகடவென விழுங்கி,
கண் ஜாடைப் பேச்சுக்களை கண்டும் காணாமல் ஒதுக்கி,
கண்ணால் சிரிக்கும் கணவர் முன் கண்ணயர்ந்து தூங்கி,
கண் சிமிட்ட நேரமின்றி கணப்பொழுதும் தவித்தபோது ,
கண்ணுக்குள் சந்தோஷம் கணநொடி மின்னுவதேன்,
கண்ணுக்கெட்டும் நேரத்தில் .....
நாளைப்பொழுது ஞாயிற்றுக்கிழமை
.

Tuesday, March 16, 2010

அருமை புரியும் நேரம்


இளமையின் அருமை முதுமையில் புரியும் .
இன்பத்தின் அருமை துன்பத்தில் புரியும் .
பணத்தின் அருமை வறுமையில் புரியும் .
பதவியின் அருமை ஓய்வில் புரியும் .
வெப்பத்தின் அருமை குளிரில் புரியும் .
வெளிச்சத்தின் அருமை இருளில் புரியும் .
ஒளியின் அருமை குருட்டில் புரியும் .
ஒலியின் அருமை செவிட்டில் புரியும் .
மழலையின் அருமை மலட்டில் புரியும் .

நிழலின் அருமை வெயிலில் புரியும் .
உணவின் அருமை பசியில் புரியும் .
உறுப்பின் அருமை ஊனத்தில் புரியும் .
தண்ணீரின் அருமை தாகத்தில் புரியும் .
தாரத்தின் அருமை தனிமையில் புரியும் .
தாயின் அருமை நோயில் புரியும் .
தர்மத்தின் அருமை இறுதி மூச்சில் புரியும் .
உறவின் அருமை பிரிவில் புரியும் .
உயிரின் அருமை மரணத்தில் புரியும் .


தாத்தா படம்


அப்பா இறந்து விட்டார் .

பிரேம் போட்ட புகைப்படமாய் சாமி அலமாரியில் இடம் பிடித்தார் .

மகன் வளர்ந்து கல்லூரி சென்றான் .

தாத்தா படத்தை ஹால் சுவற்றில் ஒரு ஓரமாய் மாட்ட ஆலோசனை சொன்னான் .

மருமகள் வந்து விட்டாள்.

தாத்தா படம் ஹாலை ஒட்டிய அறைக்குள் ஒரு மூலையில் இடம் பிடித்தது .

பேரன் பிறந்து வளர்ந்தான் .

தாத்தா படத்தை ஆல்பத்தில் வைக்க ஐடியா கொடுத்தான் .

பேரனுக்கு மனைவி வந்தாள்.

பழைய ஆல்பங்கள் அனைத்தும் இப்போது பரணியில்!

Tuesday, January 19, 2010

சந்தோசம்


எல்லாமே நிரந்தரம் என்று நினைத்திருந்தேன் .
ரொம்ப சந்தோஷமாக இருந்தது .
எதுவுமே நிரந்தரம் இல்லை என்று புரிந்தது .
என்னவோ ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது .

Friday, January 15, 2010

தாலாட்டு




ஆனிப்பொன் தொட்டிலில் அழகு ரோஜா மலர்ச்சரம் !
ஆடி வெள்ளி அணிவிளக்கே தாலேலோ தாலேலோ ..
பாடி வந்த பசுங்கிளியே ஆடி வந்த அழகு மயில் !
தேடி வந்த தேன்நிலவே நாடி வந்த நட்சத்திரம் !
ஆரிரரோ ஆராரோ ஆள வந்த ஓவியமே !
ஆரிரரோ ஆராரோ காவியமே கண் வளராய் !
முத்துமணி பல்லக்கே மூன்றாம் பிறை நிலவொளியே !
மரகதமே மாணிக்கமே மண்ணில் வந்த வெண்நிலவே !
ஆரிரரோ ஆராரோ வைரமணி பெட்டகமே !


ஆரிரரோ ஆராரோ வைடுரியமே கண் வளராய்!
தந்தை குலம் விளங்கிடவே தரணியிலே வந்துதித்தாய்!


தாய் மனசு குளிர்ந்திடவே தங்கமே நீ வளர்வாய் !

ஆரிரரோ ஆராரோ அள்ளி வைத்த பொன்மழையே !

ஆரிரரோ ஆராரோ அஞ்சுகமே கண் வளராய் !

Sunday, January 3, 2010

என்னை மறந்தேன்


என் காதலியின் எழில் கண்டு

மயில் ஆட மறந்தது .


குயில் கூவ மறந்தது .


மான் துள்ள மறந்தது .


மீன் நீந்த மறந்தது .


நான் என்னை மறந்தேன் .


அவளோ என்னையே மறந்தாள்!

இன்று அதிகாலை


இன்று அதிகாலை மழை பெய்தது .
எப்போதையும் விட சிலிசிலிர்பாய் இருக்கிறது .
முற்றத்தில் குளிர் காற்று வீசியது .
எப்போதையும் விட குளுகுளுப்பாய் இருக்கிறது .
மெல்லிசாய் புள்ளினங்கள் ஓசை
எப்போதையும் விட இன்னிசையாய் ஒலிக்கிறது.
வாசலில் வந்து வானத்தை நிமிர்ந்து பார்க்கிறேன்.
இளவானம் என்னென்னவோ கதை சொல்கிறது .
மெல்லிய பூஞ்சிறகு இதயத்தை வருட
மனசுக்குள் இனிப்பை வாரி இறைக்கும்
இத்தனை மாற்றங்கள் எதனால் ?
நேற்று மாலை என்னை பெண் பார்த்தவர்
சொன்ன வார்த்தையால் ...
"உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு !"